Sunday, 14 October 2012

ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் நடுகடலில் தாக்குதல்: இலங்கை கடற்படையினர் அட்டூழியம்


புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது43). இவருக்கு சொந்தமான 2 விசைப்படகுகள் உள்ளன. இந்த படகுகளில் குருநாதன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் முத்து(37). ஆரோக்கியம் (45). குழந்தைவேலு (42) மாரிமுத்து (30), சங்கரன்(40), சம்பந்த மூர்த்தி(30), குமார் (50) உள்ளிட்டோர் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.

2 விசைபடகுகளில் அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். 14 நாட்டிக்கல் கடல் மைல் பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது திடீரென்று வேகமாக அங்கு ரோந்து படகு ஒன்று வந்தது.

அதில் இலங்கையை சேர்ந்த கடற்படையினர் இருந்தனர். இலங்கை படையினர் திமு, திமுவென ஜெகதாபட்டினம் மீனவர் படகில் ஏறினார்கள். எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கிறீர்களா? என்று கேட்டுக்கொண்டே தடியால் மீனவர்களை தாக்கினார்கள். பின்னர் இந்த இடத்தை விட்டு ஓடிவிடுங்கள் என்று மிரட்டிவிட்டு மீனவர்களின் வலைகளையும் சேதப்படுத்தி விட்டு சென்றுவிட்டனர்.

இதில் குருநாதன், முத்து ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக மீனவர்கள் மீன்பிடிப்பதை விட்டு விட்டு கிழிந்த எறிந்த வலைகளை எடுத்துக் கொண்டு கரைக்கு திரும்பினார்கள். இதுகுறித்து குருநாதன், தமிழக கடலோர பாதுகாப்பு குழு மந்திரியிடம் புகார் செய்தார். இந்த சம்பவம் ஜெகதாபட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment