Friday, 27 December 2013

அர்விந்த் கெஜ்ரிவாலின் வாழ்க்கைப் பாதை

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று, பின்னர் அரசியல் கட்சி கண்ட ஓராண்டுக்குள்ளாக டெல்லியில் ஆட்சியைப் பிடித்து நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால். அரசியல் கட்சிகளின் வழக்கமான பாணியைக் கையாளாமல் ஆம் ஆத்மி கட்சியை மாறுபட்ட பாதையில் வழிநடத்தி, சாதித்துள்ளார் அர்விந்த் கெஜ்ரிவால்.
ஹரியானா மாநிலம் ஹிசாரில் 1968-ம் ஆண்டு பிறந்த அர்விந்த் கெஜ்ரிவால் காரக்பூர் ஐஐடியில் மெக்கானிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். 1989-ல் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் சேர்ந்த அவர், 3 ஆண்டுகளில் அதில் இருந்து விலகினார்.
1995-ம் ஆண்டு இந்திய வருவாய்த் துறையில் சேர்ந்த அவர், அதன் துணை ஆணையராக பணியாற்றியுள்ளார். வருவாய்த்துறை இணை ஆணையர் பணியில் இருந்து 2006-ம் ஆண்டு விலகிய அரவிந்த் கெஜ்ரிவால், முழுநேர சமூகப் பணியில் ஈடுபட்டார்.
1999-ம் ஆண்டு, பரிவர்த்தன் என்ற இயக்கத்தைத் தொடங்கி, அதன் மூலம் மின்சார வசதி, ரேஷன் பொருட்களைப் பெறுதல் போன்ற உதவிகளை மக்களுக்குச் செய்தார் அர்விந்த் கெஜ்ரிவால். போலி ரேஷன் அட்டைகள் தயாரிக்கப்பட்டதை கண்டறிந்து பரிவர்த்தன் இயக்கம் மூலம் முறைகேடுகளை அம்பலப்படுதினார். தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி அரசு நிர்வாகத்தில் நிகழ்ந்த வேறு பல முறைகேடுகளையும் அவர் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.
ஊழலை ஒழிக்க உதவும் வகையில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரும் போராட்டத்தில் அன்னா ஹசாரேவுக்கு தோள் கொடுத்தார் அர்விந்த் கெஜ்ரிவால். இதன் தொடர்ச்சியாக, தூய நிர்வாகத்தை கொடுக்கும் நோக்கத்துடன் 2012-ம் ஆண்டு, நவம்பர் 26-ல் ஆம் ஆத்மி கட்சியை அவர் தொடங்கினார். ராமன் மகசேசே விருது, சத்யேந்திர கே டூபே விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள அர்விந்த கேஜ்ரிவால், ஸ்வராஜ் என்ற நூலையும் எழுதியுள்ளார்.
டெல்லி முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள அர்விந்த் கெஜ்ரிவால், அரியானா மாநிலம் பிவானி கிராமத்தில் பிறந்தவர். இந்த கிராமத்தைச் சேர்ந்த 4-வது முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆவார். இவருக்கு முன்னர் பன்சி லால், பனராசி தாஸ், மாஸ்டர் ஹூகம் சிங் ஆகிய மூன்று முதலமைச்சர்களும் இதே பிவானி கிராமத்தில் இருந்து டெல்லியை ஆண்டவர்கள்.

Tuesday, 24 December 2013

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறும்

அடுத்த ஆண்டு நடைபெறும் 7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணி நிர்வாகமும், 5 இந்திய வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்படி தக்கவைக்கும் வீரர்களில், முதல் வீரருக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும், ஒரு அணி அதிகபட்சமாக 60 கோடி ரூபாய் வரை ஏலத்திற்காக செலவிடலாம் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வீரர்கள் ஏலம், தேவைப்பட்டால் பிப்ரவரி 13-ம் தேதியும் நடைபெறும் என்றும், ஏலம் நடைபெறும் இடம் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.