Tuesday, 27 November 2012

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு


ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.



சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

துளசி இலை(basil) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.
(இந்த தகவலை பகிர்ந்த அந்த நல்லுள்ளதிர்க்கு "தேடலின்" மனமார்ந்த நன்றிகள் ...!)

thanks-facebook          

    Sunday, 25 November 2012

    கங்கைகொண்ட சோழபுரம்

     இந்த தீபாவளிக்கு சொந்த ஊருக்கு இரண்டு நாள் முன்னதாக (தீபாவளி செவ்வாய் கிழமை)சனி கிழமை சென்றதால் வீட்டில் எல்லோரும் கங்கைகொண்ட சோழபுரம் செல்லாம் என்று முடிவெடுத்து  சென்று பார்த்துவந்தோம் .கங்கைகொண்ட சோழபுரம் பார்பவர்களுக்கு ஒரு பிரமிப்பு .தமிழர்களின் கலை ,கட்டிட நுணுக்கம் ,உழைப்பு ,மற்றும் ஆளுமை திறமைகளை பறைசாற்றுவதாக உள்ளது .பல நூற்றாண்டுகள் கடந்து நிற்கிறது. இதை கட்டிய மாமன்னனையும் கலைவேலை பாட்டையும் நினைத்து எடுத்த புகைப்படம் வலைத்தளத்தில் படித்ததை  பதிவு செய்து உள்ளேன் உங்களுக்காக .தமிழர்கள் நாம் எல்லோரும் சென்று பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று.



    முதலாம் இராசேந்திர சோழன் அலைகடல் நடுவில், மரக்கலம் பலசெலுத்திப் பெற்ற கங்கை வெற்றியினைச் சிறப்பிக்கும் வகையில் கட்டப்பட்டது இக்கோயில். சிதம்பரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் தென்மேற்காகவும், கும்பகோணத்தில் இருந்து வடக்கே 30 கி.மீ தொலைவிலும், அரியலூரிலிருந்து மேற்கே 30 கி.மீ தொலைவிலும் அணைக்கரையில் இருந்து 7 கி.மீ தொலைவிலும் உள்ளது.





    ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் முதலாம் இராசேந்திர சோழனின் தலைநகரம். கங்கை, இலங்கை, கடாரம், ஜாவா, போர்னியா, சுமத்திரா அந்தமான்- நிகோபார் எனப்பரந்து விரிந்த சோழப்பேரரசின் இதயம், இப்பகுதி. முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பிறகு, குலோத்துங்கன், விக்கிரமசோழன், இராசாதிராசன் ஆகிய மன்னர்களின் தலைநகரம்.


    தஞ்சைப் பெரியகோயிலை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தஞ்சைக் கோயிலைவிட சற்று உயரம் குறைந்தது. ஆயினும், கட்டடக் கலை நுணுக்கத்தில் மிகச் சிறந்தது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய விமானத்திற்குப் பிறகு, கங்கை கொண்ட சோழீச்சுவரர் விமானமே தமிழ்நாட்டில் உள்ள விமானங்களில் உயர்ந்து நிற்பதாகும். 
    மெய் சிலிர்க்கக்கூடிய வகையில் கட்டடக் கலையையும் சிற்பக்கலையையும் பிரம்மாண்டமான உருவத்தில் வடித்து, கவர்ச்சியான பெரியதொரு கோட்டை வாயில்போல், மண்டபத்தின் கிழக்கு மூலையில் பிரதான வாயில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை மீது, அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நடுவே, தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது. அது, தொடர்ந்து, மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்லுகிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரை, எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.
    மற்றொரு கோடியில் இறங்கி ஏறாமல் செய்யக்கூடிய இடைவெளி இருப்பது இந்த மண்டப அமைப்பில் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. அதன் மேல்பகுதி, மண்டபத்தின் மேலே கூரை எழுப்பி, அதற்கும் விமனத்திற்கும் இடையே இரண்டு அடுக்குக் கட்டிடம் போலத் தெரிகிறது. இடைவெளிக்குள் இரண்டு வரிசைகளில் சதுரமான பெரிய(மேடை தாங்கித்) தூண்கள், வரிசைக்கு நான்காக, உள்ளன, இந்தத் தூண்கள் சம இடைவெளிகளில் நிறுத்தப்பட்டிருப்பதால் மண்டபத்திற்கு மேலும் அழகு ஊட்டுகின்றன. இவற்றுக்குப் பின்னால் கர்ப்பக்கிரகம் கம்பீரமாகத் திகழ்கிறது.

    விமானத்தின் உயரம் 160 அடி. எனவே, இது தஞ்சாவூர் அளவு உயரமாக இல்லை. ஆனால் இங்கும், விமானம் அந்தக் கோயில் முழுவதையும் கவரும்படியும் வழியில் செல்பவர் அனைவர் மனத்திலும் பதியும்படியும் அமைந்திருக்கிறது இங்கு ஏராளமான சிறுகோயில்கள் இருந்தன என்பது அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியால் தெரிகிறது. இந்த உட்கோயில்கள் இன்னும் ஆராயப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன. விமானத்தின் அடித்தளம், கர்ப்பக்கிரகத்தின் செங்குத்தான சுவர்கள், இவற்றின் உயரம் 35 அடி; தஞ்சாவூரைப் போல, இங்கும், இந்தச் சுவர்கள் மிகப்பெரிய பிதுக்கத்தால் இரண்டு மாடிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்குப் பக்கத்தில் மட்டுமே கதவுகள் உள்ளன. விமானத்தில் எட்டு நிலைகளே உள்ளன; தஞ்சாவூரில் இருப்பது போல 13 நிலைகள் இல்லை; கட்டிடத்தின் இந்தப் பகுதியில் தான் உள்ளத்தைக் கவரும் அழகுமிகு வளைவுகள் உள்ளன. இவை கட்டட அமைப்பு முறையில் உண்டான மாறுதல்களைச் சுட்டுகின்றன.

    இது கட்டடக் கலையின் புதிய சாதனை எனலாம். கோபுரத்தின் கோணங்களில் உட்குழிவான வரைவுகளிலும் அதன் பக்கங்களிலும் உள்ளே வைத்து மூடப்பட்ட வடிவு விளிம்புகளிலும் நெளிவுக் கோடுகள் போடப்பட்டிருப்பதைக் காணலாம். இவைதான், கங்கை கொண்ட சோழபுர கோயிலுக்குப் பெண்ணியல்பு ஊட்டுவன. உச்சிப் பகுதியில் இப்படி அழகுபடுத்தப் பட்டிருப்பது, பெண்கள் சீவிச் சிங்காரிப்பது போன்றது. கூடுகளின் நான்கு "சைத்தியங்கள்" பறவைகளின் இறகுகள் போல உள்ளன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது முற்றிலும் பருவம் அடைந்த பெண்ணின் அழகை சோழர்களின் இந்த அரிய படைப்பில் நுகருகிறோம். (பெர்சின் பிரவுன்). தஞ்சாவூரைப் போல, இங்கும் மூலஸ்தானத்துக்கு அதே நிலையிலும் சம்மந்தத்திலும், சண்டிகேஸ்வரர் சந்நிதி இருக்கிறது. தாங்கித் தூண்கள், வரிசைக்கு நான்காக, உள்ளன, இந்தத் தூண்கள் சம இடைவெளிகளில் நிறுத்தப்பட்டிருப்பதால் மண்டபத்திற்கு மேலும் அழகு ஊட்டுகின்றன. இவற்றுக்குப் பின்னால் கர்ப்பக்கிரகம் கம்பீரமாகத் திகழ்கிறது.

    Saturday, 24 November 2012

    எங்கிருந்து வந்தது டெங்கு ?



    இன்று நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது டெங்கு. ஆப்பிரிக்க மொழியான ஸ்வாஹிலியில் இருந்து வந்ததுதான் டெங்கு என்ற சொல். ஸ்வாஹிலியில் டெங்கு என்ற சொல்லுக்குத் தீய சக்தி என்று பொருள்.

    ஆப்பிரிக்காவில் உருவாகி இன்று உலகம் முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை ஏற்படுத்துவது டி. இ.என். எனப்படும் இந்த வைரஸ் கிருமிதான்.


     இந்த கிருமி ஆற்றிலும் இல்லை, காற்றிலும் இல்லை. அது வாழ்வதோ இரண்டே இரண்டு இடங்களில்தான். ஒன்று மனித உடல். மற்றொன்று ஏடிஸ் ஏஜிப்டை என்ற ஒருவகை கொசு.
    கொசுவைக் கண்டு அச்சம் - சிக்குன்குனியா கொசுதான் இதுவும் : பாம்பைக் கண்டால் படை நடுங்கும் என்பார்கள். இன்று டெங்கு கொசுவைக் கண்டு நாடே அஞ்சுகிறது. டெங்குவைப் பரப்பும் இந்த கொசு தமிழ்நாட்டுக்குப் புதியதல்ல. சில ஆண்டுகளுக்கு முன் நம்மை அச்சுறுத்திய சிக்கன்குனியா நோய்க்குக் காரணமான அதே கொசு வகைதான், இப்போது டெங்குவையும் பரப்புகிறது. பூந்தொட்டியோ, தண்ணீர் தொட்டிகளோ, பழைய டயரோ எங்கெல்லாம் தண்ணீர் தேங்குகிறதோ அங்கெல்லாம் உற்பத்தியாகும் இந்த டெங்கு கொசு.
    பகலில் கடிக்கும் கொசு - நோய் பரப்பும் கொசு : மலேரியா போன்ற நோய்களைப் பரப்புகிற கொசு வகை இரவிலும், அதிகாலை வேளையிலும்தான் மனிதர்களைக் கடிக்கும். ஆனால், டெங்கு கிருமியைத் தாங்கிவரும் இந்தக் கொசு பட்டப்பகலில்தான் கடிக்கும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரிடையாகப் பரவுவதல்ல டெங்கு. டெங்கு நோய் பாதித்த ஒருவரைக் கடித்து, ரத்தம் உறிஞ்சிய பிறகு, அதே கொசு இன்னொரு நபரைக் கடிப்பதன் மூலமே டெங்கு பரவுகிறது.
    அறிகுறிகள் என்னென்ன?
    கடுமையான காய்ச்சல், கண்களுக்குப் பின்னால் துளைத்தெடுக்கும் தலைவலி, உடல் வலி, தடை வலி, மூட்டு வலி, சோர்வு மற்றும் தோல்களில் செந்நிறத் தடுப்பு போன்றவை டெங்கு நோய்க்கான அறிகுறிகள். இவை அனைத்தும் டெங்கு கொசு கடித்த நான்கில் இருந்து ஏழு நாட்களுக்குள் தென்படும்.
    கொசுக் கடியால் ஏற்படும் மாற்றம் : டெங்கு வைரஸ் கிருமியை தாங்கி வரும் ஏடிஸ் ஏஜிப்டை கொசு ஒரு நபரைக் கடித்தால் என்ன நடக்கும். டெங்கு வைரஸ் கிருமி அந்த நபரின் தோல் பகுதியிலிருந்து ரத்த ஓட்டத்திற்குள் நுழைகிறது. அங்கிருந்து அந்த வைரஸ் கிருமி WBC எனப்படும் வெள்ளை ரத்த அணுக்களின்உட்புறம் சென்றடைகிறது. அதன் விளைவாக ஏற்படுவது தான் டெங்கு காய்ச்சல், தலைவலி, தோலில் செந்நிற தடிப்பு போன்றவை. இதன் பிறகு டெங்கு கிருமி மேலும் வலுவடைந்து மேலும் மற்ற உறுப்புகளுக்குப் பரவுகிறது. அப்போது ஏற்படுவதுதான், டெங்கு காய்ச்சலின் மற்றொரு கடுமையான பரிமாணம் டெங்கு ஹெமராஜிக் பீவர் மற்றும் டெங்கு ஷாக். டெங்கு நோய் தாக்கும் நபர்களில் 5 சதவிகிதம் பேருக்குதான் டெங்கு நோயின் கடுமையான பரிமாணம் தென்படுகிறது.
    கண்டுபிடிக்கப்படாத மருந்து : எல்லோரது மனதிலும் எழும் கேள்வி, டெங்கு நோய் குணப்படுத்தக் கூடிய ஒன்றா, இதற்கு மருந்து உண்டா என்பதுதான். டெங்கு கிருமியை நேரடியாக ஒடுக்கும் மருந்து, மாத்திரை எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மை. மலேரியா போன்ற நோய்களுக்கு இருக்கும் மருந்துகளோ சிகிச்சையோ டெங்கு நோய்க்குக் கிடையாது. காய்ச்சலைக் குறைப்பதற்கான மருந்து, நீர்ச்சத்து இழப்பை ஈடுசெய்யும் சிகிச்சை, வலி நிவாரணிகள் என்பன போன்ற மறைமுகமான சிகிச்சைகள்தான் உள்ளன.
    வரும் முன் காப்பதே நல்லது : அதனால், உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சிறந்த வழி, வருமுன் காத்துக் கொள்வதுதான். வீட்டின் அருகே நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொசு வலைகளைப் பயன்படுத்துங்கள். கொசுக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில், உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணியுங்கள்.

    Wednesday, 21 November 2012

    நோயின்றி வாழ மீன் சாப்பிடுங்க...


    நோயின்றி வாழ மீன் சாப்பிடுங்க...
    அறிவை அதிகரிக்கும் மீன் உணவுகள், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்!....

    நீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா? அப்படி என்றால் மீன் சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஸ்வீடன்ஆராய்ச்சியாளர்கள். சுமார் 5 ஆயிரம் பேரை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தார்கள்.



    ஆய்வு முடிவில், வாரத்திற்கு ஒன்றும் மேற்பட்ட முறை மீன் உணவு உட்கொண்டவர்கள், அதைவிட குறைவாக மீன் உட்கொண்டவர்கள் மற்றும் மீனே சாப்பிடாதவர்களைக் காட்டிலும் அதிக அறிவுடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்ப ட்டது.
    இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, `15 வயதுக்கு மேல் மீன் உணவு அதிகம் உட்கொள்வது அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட முறை மீன் உணவை எடுத்துக்கொள்பவர்கள்தான் இந்த பலனை பெற முடியும். அதனால், மீன் உணவுகளை தவிர்க்காமல் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது' என்றனர்.

    தாய்மைக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் அறிவில் படு சுட்டியாக இருப்பார்களாம். அமெரிக்காவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று தாய்மார்களின் உணவுப்பழக்கவழக்கத்திற்கும், பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளைக் குறித்து ஆராய்ந்தது.

    இந்த ஆராய்ச்சி நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவுஉண்ணாத தாய்மார்களின்குழந்தைகளை விட, அறிவுக் கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என முடிவு வெளியிட்டிருக்கிறது.

    தாய்மார்களின் உணவுப்பழக்கம் ஆராயப்பட்டது. பின்னர் குழந்தைகளுக்கு மூன்று வயதான போது அவர்களுக்கு சில சோதனைகள் கொடுக்கப்பட்டன. பார்வை, எளிதில் உள்வாங்குதல், கவனம் சிதறாமை போன்ற வகைகளில் நடந்த இந்த சோதனையில் முன்னிலை வகித்தவர்கள் மீன் உணவு உட்கொண்ட தாய்மாரின் குழந்தைகளே.

    மீன்களை உண்ணும் மீன்கள், மற்றும் அதிககாலம் வாழும் மீன்கள் போன்றவை பாதரச அளவு அதிகம் கொண்ட மீன்கள் எனும் வரிசையில் வருகின்றன. அத்தகைய மீன்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது. பாதரச அளவு குறைந்த அளவு உள்ள மீன்களே தேவையானது என்பது இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

    மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம். மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்தநோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது. ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லி விட்டனர்.

    மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்தஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்குஅவர்கள் அறியாமலேயே,"ஒமேகா 3' கிடைக்கிறது.

    அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

    ஆண்களின் ஆயுளுக்கு மீன் துணைபுரியுமா?

    ஜப்பானில் மருத்துவப்பேராசிரியர் ஒருவர் 1980 முதல் 1999 வரை 30 முதல் 64 வயது வரையாந 4070 ஆண்களையும் 5182 பெண்களையும் சோதனைக்கு உட்படுத்தினார். 20 ஆண்டுகளாக கண்காணித்தபின் ஆய்வறிக்கை தயாரித்தார். ஆண் ஒருவர் நாள்தோறும் ஒரு முறை மீன் உட்கொண்டால் இதய நோய்,உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் விதிதத்தை 30விழுக்காடு வரை குறைக்கலாம். 2 நாட்களுக்கு ஒரு முறை மீன் உட்கொண்டால் உடம்புக்குத் தேவைப்படும் சத்து போதிய அளவு கிடைக்கலாம்.

    பெண்களிடையே உயிரிழப்பு விகிதம் குறைவு என்பதால் அவர்கள் மீன் உட்கொள்வதன் விளைவு சரியாகத் தெரியவில்லை. மீன் இறைச்சி ரத்தக் கட்டியைத் தடுக்கலாம். இருதய நோய் மூளையில் ரத்தம் உறைவது முதலானவற்றைத்தடுக்கலாம்.

    தடுக்கப்படும் நோய்கள்

    ஆஸ்துமா:

    மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.

    கண் பாதிப்பு:

    மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும்பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.

    கேன்சர்:

    பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

    இருதய நோய்:

    கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

    அரசு கலை கல்லூரி (தன்னாட்சி) கும்பகோணம்














    பெயரில் என்ன இருக்கிறது

    இன்னாருடைய மகன்/மகள் என்பதைத் தாண்டி ஒருவரின் முதல் அடையாளம் அவருடைய பெயர்தான்.ஆனால் இப்போதைய பெற்றோர்கள் போல 20 வருடங்களுக்கு முந்தைய பெற்றோர்கள் பெயருக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கூப்பிட ஒரு நல்ல பெயர் என்பதைத் தாண்டி அவர்கள் அதிகம் யோசிக்கவில்லை.

    இப்போது பள்ளியின் வருகை பதிவை எடுத்துபார்த்தால் ஒரே பெயர் இருவருக்கு இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.அதாவது இப்போதைய பெற்றோர்கள்,தம்

    பிள்ளைகளுக்கு யாருக்கும் இல்லாத பெயர் இருக்க வேண்டும் என்று தேடித்தேடி வைக்கிறார்கள். அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வைக்கும் பெயர் நன்றாகத் தான் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

    என் அண்ணன் மகளின் பெயர் 'ரிஸ்மிதா', என் தோழியின் குழந்தை பெயர் 'தனிஷ்தா'. நண்பனின் பையன் பெயர் 'மிதுல்’. அந்தப் பெயரை விட அதற்கு அவன் சொன்ன காரணம் தூக்கிவாரிப் போட்டது.

    "மிதுல்-னா என்ன அர்த்தம்டா?" என்றேன்.

    "'அதுல்' மாதிரி மிதுல் " என்றான்.

    இன்னொரு நண்பன் நல்ல நல்ல தமிழ்ப் பெயர்களை பரிசீலனை செய்துவிட்டு கடைசியில் 'ஹர்ஷிதா’ என்று வைத்திருக்கிறான்.

    அதாவது 'ஷா, ஸ், ஹா, ஜா’ இது போன்ற எழுத்துக்கள் இல்லாமல் பெயர் வைக்கக் கூடாது என்று சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

    அஜித்,விஜய்,விஷால்,தனுஷ்,த்ரிஷா,ஜெனிலியா,குஷ்பு,ஹன்சிகா என முன்னணி சினிமா நட்சத்திரங்கள் பெயர்களால் உந்தப்பட்டு,அதன் பாதிப்பு இந்த தலைமுறையினர் இப்படி பெயர் வைக்க காரணமாக இருக்கலாம்.

    பெயரிலே தன் மகள்/மகன் தனியாக தெரிய வேண்டும் நினைப்பதெல்லாம் சரி தான். ஆனால் அத்தனை பேரும் தனித்தனியாக தெரிகிறார்களே, எப்படி கவனம் பெற முடியும்?

    'பேண்டஸி' படங்களை பார்த்து விட்டு வரும் போது, திருப்தியை தாண்டி ஒருவித அயர்ச்சியாக இருக்கிறது. காரணம், அத்தனை சீன்களிலும் புதுமை, மெனக்கெடல், பார்வையாளர்களின் கவனத்தை தக்கவைக்க ஆசை. எதாவது ஒரு சீன் கொஞ்சம் சுமாராக இருந்தால் தான் அடுத்த சீன் பார்க்கிற மாதிரி இருக்கும். கொஞ்சம் கூட கவனத்தை திருப்ப முடியாததால் படம் முடிந்த பிறகு அயர்ச்சி தான் வருகிறது.

    அதே போல கேட்கிற அத்தனை குழந்தைகளின் பெயரும் புதிய பெயர்களாக இருப்பதினால் எந்த பெயரையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை.

    முன்னர் பள்ளிகளில் ஒரு வகுப்பில் நான்கு பேருக்கு ஒரே பெயர் இருந்திருக்கிறது. நான்கு 'கார்த்திகேயன்’கள், மூன்று 'செந்தில்குமார்’கள், மூன்று 'சரவணகுமார்’கள், இரண்டு 'சரண்யா’க்கள், மூன்று 'பிரியா'க்கள் என ஒரே பெயரில் எத்தனை பேர் இருந்தாலும் 'மொட்டை' கார்த்தி, குண்டு கார்த்தி, ஆர். பிரியா, வீ. பிரியா என ஒரே பெயரில் பலர் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருந்தது.

    அந்த 'பேட்ச்’ இப்போது அப்படியே அலுவலகத்தில் இருக்கிறது. அலுவலகத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. ஆனால் அடுத்து 20 வருடங்களுக்கு பிறகு வருபவர்களுக்கு பு்துமையான பெயராக இருந்தாலும் அது ஒரு அடையாளத்தை பெற்றுத்தருமா என்பது கேள்விக்குறிதான். எப்போதுமே ஒருவரது திறமை தான் அடையாளத்தை கொடுக்கும்.

    இதைத் தாண்டி உள்ளூர் மற்றும் சர்வதேச தலைவர்களின் பெயர்களை, கடவுளின் பெயர்களை, தாத்தா / பாட்டிகளின் பெயர்கள், ராகங்களின் பெயர்கள் போன்றவற்றை வைப்பார்க்ள் இப்போது அப்படி ஒரு பழக்கம் இருப்பது போல தெரியவில்லை. தியாகராஜன்(திருவாரூர்), பாண்டியன்(மதுரை), ரங்கநாதன், ரங்கராஜன் (ஸ்ரீரங்கம்), காந்திமதி, இசக்கிமுத்து (திருநெல்வேலி),சப்தரிஷி, ஸ்ரீமதி (லால்குடி),மீனாட்சி (மதுரை), காமாட்சி (காஞ்சிபுரம்) என்று பேரை வைத்தே அவர் எந்த ஊர் என்பதையும் ஓரளவுக்கு கண்டுபி்டிக்க முடியும். இப்போது இது போன்ற பெயர்களையே பார்க்க முடியவில்லை.

    தனது ஆசிரியரின் பெயரையே தங்களது குழந்தைகளுக்கு வைக்கும் வழக்கமும் இருந்தது. தாத்தாவின் பெயரை பேரனுக்கு வைப்பார்கள். பாட்டியின் பெயரை பேத்திக்கு வைப்பார்கள். ஆனால் இப்போது அர்த்தமற்ற பெயர்களையே வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த தலைமுறை குழந்தைகளில் யாருக்காவது தாத்தா / பாட்டியின் பெயர் வைத்திருக்கிறார்களா என்று யோசித்து பாருங்கள்.

    நமது வாழ்வியலை,கலாசாரத்தை பிரதிபலிப்பதில் பெயர்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இனியாவது பிறமொழி கலக்காமல், அர்த்தமுள்ள,நல்ல தமிழ்பெயர்களையும் பரிசீலிக்கலாமே!



    நன்றி : விகடன்