Sunday, 28 April 2013

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 9-ந் தேதியன்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 31-ந் தேதியன்றும் வெளியாகும் என்று தமிழக அரசு

சென்னை: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 9-ந் தேதியன்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 31-ந் தேதியன்றும் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு இன்று வெளிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தேர்வு முடிவுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ந் தேதி தொடங்கி மார்ச் 27-ந் தேதி வரை நடைபெற்றது. இத் தேர்வில் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் எழுதினர். 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ந் தேதியன்று வெளியிடப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27-ந் தேதியன்று தொடங்கி ஏப்ரல் 12-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 11,359 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 69501 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்காக 3013 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 லட்சத்து 43 ஆயிரத்து 511 மாணவர்களும், 5 லட்சத்து 25 ஆயிரத்து 990 மாணவியரும் எழுதியிருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவு மே 31-ந் தேதியன்று வெளியிடப்படுகிறது.


+2 தேர்வு முடிவுகள் வரும் மே 9 ஆம் தேதி காலை 1௦ மணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31 ஆம் தேதி காலை 9.15 க்கும் வெளியிடப்படும் என தமிழ்நாடு தேர்வுத் துறை இயக்குநர் தெரவித்துள்ளார்.

தேர்வு முடிவுகள் இவ்வாண்டு தமிழக அரசின் கல்வித்துறை இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்படும்.

Monday, 15 April 2013

அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியர், ஊழியர் சங்கத்தினர் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்த அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியர், ஊழியர் சங்கத்தினர் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன், துணை ஒருங்கிணைப்பாளர் சி.மதியழகன், ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் தலைமையில் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்கள் நிர்வாகத்திற்கு எதிரான கோஷங்களுடன் ஊர்வலமாக சென்று நிர்வாக அலுவலகக் கட்டடம், பூமா கோயில், ஊழியர் சங்க அலுவலக கட்டடம் ஆகியவற்றின் முன்பு வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். பின்னர் பல்கலைக்கழக பூமா கோயில் முன்பு ஆசிரியர்- ஊழியர் சங்க கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Sunday, 7 April 2013

புதிய தலைமுறைத் தமிழன் விருதுகள் -2013

தமிழ் இலக்கியம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழர்களை கவுரவிக்கும் வகையில் புதிய தலைமுறைத் தமிழன் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. சென்னையில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில், கவிக்கோ அப்துல்ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன், டாக்டர் சிவதாணுப்பிள்ளை உள்ளிட்ட 12 பேருக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. 

தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த, பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனைத் தமிழர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து, விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது புதியதலைமுறை. இரண்டாம் ஆண்டாக இந்தாண்டும் விருதுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான விழா சென்னை நந்தம்பாக்கம் வணிக மையத்தில், கலை நேர்த்தியுடன் கட்டமைக்கப்பட்ட பிரம்மாண்டக் கலையரங்கில் இன்று நடைபெற்றது.

இதில், கலை, விளையாட்டு, இலக்கியம், அறிவியல், வணிகம், சமூகசேவை ஆகிய 6 பிரிவுகளில் சாதனை படைத்த தமிழர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் சாதனையாளர்களுக்கான வாக்குகள் நேரடியாகவும், தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் இணையதளம் வழியாகவும் பெறப்பட்டன.

அதிக வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவுக்கான சாதனையாளர்களையும் விருதுக்குழு தேர்வு செய்தது. அதேபோல, 6 பிரிவுகளிலும் நம்பிக்கை அளிக்கக் கூடிய இளம் சாதனையாளர்கள், நம்பிக்கை நட்சத்திரம் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

தொழில் துறை

தொழில்துறையின் சாதனைத் தமிழராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த வெள்ளையனுக்கு புதிய தலைமுறையின் தமிழன் விருது வழங்கப்பட்டது. இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரமாக கண்டெய்னரை வசிப்பிடமாக மாற்றித் தொழில் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த வான்மதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலக்கியம்

தமிழ் இலக்கியத் துறைக்கான சாதனைத் தமிழர் விருது கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரத்துக்கான விருதை தமிழ்ச்செல்வி பெற்றார்.

விளையாட்டுத்துறை

விளையாட்டுத் துறையின் சாதனைத் தமிழருக்கான விருது ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளைக்கு வழங்கப்பட்டது. இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரமாக கால்பந்து வீராங்கனை ராதிகா தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

சமூக சேவை 


சமூகசேவையில் சாதனை படைத்த தமிழராக நிலமற்ற ஏழை விவசாயிகளுக்காகப் போராடி வரும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரத்துக்கான விருது ஏரிகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அருண் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது.

அறிவியல் - தொழில்நுட்பம்

அறிவியல் துறையில் சாதனை படைத்த தமிழராக டாக்டர் சிவதாணு பிள்ளை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்துறையின் நம்பிக்கை நட்சத்திர விருதை சிறிய ரக டிராக்டர்களை வடிவமைத்த ரங்கசாமி பெற்றார்.

கலைத்துறை 


கலைத்துறையின் சாதனைத் தமிழராக நடிகர் கமல்ஹாசன் கௌரவிக்கப்பட்டார். இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரமாக வீதி நாடகக் கலைஞர் சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.