Showing posts with label powercut in tamilnadu. Show all posts
Showing posts with label powercut in tamilnadu. Show all posts

Sunday, 14 October 2012

தமிழகத்தில் 6 மாதங்களுக்குள் மின்பற்றாக்குறை நீக்கப்படும்: அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் சிதம்பரம் வடக்குமெயின்ரோட்டில் உள்ள பைசல் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட செயலாளர் துரை.மணிவேல் வரவேற்றார். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், இளவரசன் எம்பி, முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம் எம்.எல்.ஏ., முருகுமாறன் எம்.எல்.ஏ. பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளரும், தமிழக நிதிஅமைச்சருமான பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 1977க்கும் பிறகு அ.தி.மு.க. போட்டியிடவில்லை என இங்கு கூறினார்கள். ஆனால் வரும் தேர்தலில் இத்தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடும். முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் வேட்பாளரை நாம் வெற்றி பெறச்செய்ய வேண்டும். தானே புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு 1 லட்சம் காங்கிரீட் வீடுகள் கட்டித்தர முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சிறிய பிரச்சினை உள்ளது. மின்வெட்டுபிரச்சினை. 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் உற்பத்தி செய்த மின்சாரத்தை வெளிநாட்டிற்கும் விற்பனை செய்தோம். அதன்பிறகு வந்த தி.மு.க. அரசு எந்த மின்உற்பத்தியையும் தொடங்கவில்லை. தற்போது கூடுதலான மின் உற்பத்திக்கான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இன்னும் 6 மாதங்களுக்குள் மின்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும். 13 ஆண்டுகள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கருணாநிதி தமிழகத்திற்கு என்ன திட்டத்தை கொண்டு வந்தார். எந்த திட்டத்தையும் கொண்டு வராத கருணாநிதிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் எதற்கு வாக்களிக்க வேண்டும். இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தவர் கருணாநிதி. அதனால் தற்போது மீனவர்கள் இலங்கை கடல்பகுதியில் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. காவிரி நீர் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா 3 முறை உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அதில் வெற்றி பெற்றுள்ளார். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் அணையில் 152 அடி வரை நீர் தேக்கலாம் என்ற உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பை பெற்றுள்ளார். முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கான உரிமை கிடைக்கும். இந்தியா வல்லரசாக முடியும். எனவே புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்காக அ.தி.மு.க.வினர் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மின்துறை அமைச்சர் விஸ்வநாதன், உள்ளாட்சித்துறை அமைச்சர் முனுசாமி, வீட்டுவசதிதுறை அமைச்சர் வைத்திலிங்கம், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் சம்பத், முன்னாள் அமைச்சர் கலைமணி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் வரகூர் அருணாசலம் உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.