தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வாலி இன்று
மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
காலமானார். அவருக்கு வயது 82.
நுரையீரல்
தொற்றுநோய் காரணமாக கடந்த சில
நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது.
இதனையடுத்து,
செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த
அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறைந்த
வாலிக்கு திரை உலகினரும் அரசியல்
தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கவிஞர்
வாலி - வரலாறு
வாலிபக் கவிஞர்.... காவியக்
கவிஞர் என்றும் அழைக்கப்படும் கவிஞர்
வாலி கடந்த 1931 ஆம் ஆண்டு திருச்சி
மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்தார்.
வாலிக்கு
பெற்றோர் வைத்த பெயர் ரங்கராஜன்.
சிறு வயதில் ஓவியம் வரைவதில்
மிகுந்த ஈடுபாடு காட்டிய அவர்,
ஓவியர் மாலி என்பவரின் மேல்
கொண்ட மதிப்பால் தன்னுடைய பெயரை வாலி என்று
மாற்றிக் கொண்டார்.
ஆரம்ப காலங்களில் திருச்சி வானொலியில் பணியாற்றியபோது, அவர் எழுதிய கற்பனை
என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே
உனை மறவேன் என்ற பாடல்
மிகவும் பிரபலமானது.
இந்தப்
பாடல் கொடுத்த புகழ் தான்
திரைப்படங்களில் பாட்டெழுத வேண்டும் என்ற ஆசையை வாலியின்
மனத்தில் விதைத்தது என்றே சொல்லலாம்.
இதை அடுத்து சென்னைக்கு வந்த
வாலி, கடந்த 1958 ஆண்டு நிலவும் தாரையும்
நீயம்மா , இந்த உலகம் ஒரு
நாள் உனதம்மா என்ற தன்
முதல் பாடலை எழுதினார்.
இதற்குப்
பிறகு அவர் தொடர்ந்து பாடல்கள்
எழுதி வந்தாலும் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த
கற்பகம் திரைப்படம் தான் அவரது வாழ்க்கையில்
திருப்புமுனையாக அமைந்தது.
இதற்குப்
பிறகு பல பாடல்களை வாலி
எழுதி வந்தாலும், எம்.ஜி.ஆரின்
அரசியல் கொள்கைகளைப் பரப்பும் விதமாக பல பாடல்களை
எழுதும் கவிஞராக உருவெடுத்தார் கவிஞர்
வாலி .
எம்.ஜி.ஆர் மட்டுமின்றி
சிவாஜி கணேசனுக்கும் ஏராளமான வெற்றிப் பாடல்களை
எழுதியுள்ளார் வாலி.
அடுத்த
தலைமுறை நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய நடிகர்களுக்கும் பல
வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் வாலி.
இது மட்டுமின்றி கமல்ஹாசன் நடித்த பல படங்களுக்கும்
வாலி பாடல்கள் எழுதியிருந்தாலும் அபூர்வ சகோதரர்கள் என்ற
படத்தில் இடம்பெற்ற உன்னை நினைச்சேன் பாட்டுப்
படிச்சேன் என்ற பாடல் தேசிய
விருதைப் பெற்றது.
இதற்குப்
பிறகு விஜய், அஜித், சூர்யா,
சிம்பு, தனுஷ் பல நடிகர்களுக்கு
வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் வாலி.
கடந்த
50 ஆண்டுகளில் 15,000க்கும் மேற்பட்ட பாடல்கள்
எழுதி சாதனை படைத்துள்ளார்.
பல பாடல்களுக்கு விமர்சிக்கப்பட்டாலும், அந்தந்த கால கட்டங்களுக்கு
ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டும்,
புது விஷயங்களைக் கற்றுக் கொண்டும் ஜனரஞ்சகப்
பாடல்களை படைத்த கவிஞர் வாலி
எனப் புகழாரம் சூட்டுகிறது திரையுலகம்.
சினிமா
என்பது ஒருபக்கம் என்றாலும், அவதார புருஷன், பாண்டவர்
பூமி, இராமானுஜ காவியம் என பல
கவிதை நூல்களை எழுதியுள்ளார் கவிஞர்
வாலி.
கவிதை,
பாடல் என்பது மட்டுமின்றி பொய்க்கால்
குதிரை, ஹே ராம், பார்த்தாலே
பரவசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் கவிஞர் வாலி.
தமிழ்நாட்டின்
சிறந்த பாடலாசிரியருக்கான மாநில விருதை 5 முறை
பெற்றுள்ள கவிஞர் வாலிக்கு, கடந்த
2007 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது
வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.
இன்று அவர் மறைந்திருந்தாலும், காற்று
மண்டலத்தில் உலா வரும் அவரது
பாடல்கள் என்றென்றும் அவர் புகழை நீடித்து
நிற்கச் செய்யும் என்பது மறுக்க முடியாத
உண்மை.